சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர், இன்று (21) அதிகாலை கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் சுங்கப் பிரகடனம் செய்ய வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படும் ‘பசுமை பாதை’ (Green Channel) வழியாக வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் தடுக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டார்.
அவர் சீன நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் சீனாவில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு பயணம் செய்து, பின்னர் தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய் ஏர்வேஸ் விமானம் விமான சேவையை பயன்படுத்தியே அவர் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
அங்கு சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, அவர் கொண்டு வந்த பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன தயாரிப்பு சிகரெட்டுகள் 88,000 அடங்கிய 440 சிகரெட் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவரை சுங்க அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்துள்ளதுடன், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
