புற்றுநோயாளர்களுக்கு செலுத்தப்படும் ரிடக்சிமெப் தடுப்பூசியில் தண்ணீர் மாத்திரமே காணப்பட்டதாகவும் இதன் பின்னரே மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கடந்த வருடம் 9,000 புற்றுநோய் மரணங்கள் சம்பவித்துள்ளது.
புற்று நோய்
அத்துடன், கடந்த வருடம் 33,000க்கும் அதிகமான புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தில் கொள்வனவு செய்யப்பட்டு புற்று நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட ரிடக்சிமெப் தடுப்பூசியில் தண்ணீர் மாத்திரமே காணப்பட்டதாக கண்டறிப்பட்ட பின்னரே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
தீவிர நோய்வாய்ப்பட்ட புற்றுநோயாளர்களுக்கு செலுத்தப்படும் ரிடக்சிமெப் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் எதிர்பார்த்த பலனைப் பெறவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
தடுப்பூசிகள் கொள்வனவு
இதனையடுத்து தடுப்பூசியில் தண்ணீர் மட்டுமே உள்ளதாக தேசிய புற்றுநோய் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இரண்டாயிரத்து 250 தடுப்பூசி குப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன
ஒன்பது கோடியே 79 இலட்சத்து 11ஆயிரத்து 481 ரூபாய் செலவில் ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து குறித்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
குறித்த மருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Source: https://ibctamil.com/article/19-000-died-from-cancer-last-year-1728861739?itm_source=parsely-popular

