Home இலங்கை 300 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஒதியமலைக் குளம் புனரமைப்பு

300 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஒதியமலைக் குளம் புனரமைப்பு

0
image

“நீர்ப்பாசனத்தின் பெருமை – எமது பாரம்பரியம்” 1000 குளங்களைப் புனரமைக்கும் திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், ஒதியமலைக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் நேற்று (20) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பல வருடங்களாகப் புனரமைக்கப்படாமல் இருந்த இக்குளம் அழிவடையும் அபாயத்தில் இருந்த நிலையில், விவசாயிகளால் அமைச்சரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே இப்புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

விவசாயப் பிரிவுகளின் விவசாயச் செழிப்பையும் கிராமியப் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

இக்குளத்தைப் புனரமைப்பதன் மூலம் 300க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் நேரடி மற்றும் மறைமுகப் பயனடைவதுடன், 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் சிறுபோகம் மற்றும் பெரும்போகம் ஆகிய இரு போகங்களிலும் விவசாயம் செய்ய முடியும்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், மகாவலி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ். ஏ. ஜி. டி. கெனிசியஸ் உட்பட ஒதியமலைப் பகுதி விவசாயிகள் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/renovation-of-odiyamalai-pond-to-improve-the-livelihoods-of-300-farming-families-1784645583

NO COMMENTS

Exit mobile version