இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன தனது தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இன்று(13.09.2024) அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பார் கவுன்சிலின் தீர்மானம்
கடந்த மே 18 ஆம் திகதியன்று, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இலங்கையில் ஒரு வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வணிக சூழலை (ஊழல் எதிர்ப்பு) மேம்படுத்துவது தொடர்பான JICA நிதியுதவியுடன் BASL திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்தது.
இந்த குழுவின் விசாரணைகளின் அடிப்படையிலேயே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) பார் கவுன்சில் ஆகஸ்ட் 31ஆம் திகதியன்று BASL தலைவர் கௌசல்யா நவரத்னவை பதவியில் இருந்து விலக்குவதற்கு ஏகமனதாக தீர்மானித்தது.
இதன்படி, BASL இன் தலைவர் பதவியில் இருந்து கௌசல்யா நவரத்னவை பதவி விலக செய்வதற்கான யோசனைக்கு பார் கவுன்சில் கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதேவேளை, 2024-2025 காலகட்டத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் பதவிக்கு கௌசல்யா நவரத்ன போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.