தேசிய வெசாக் விழாவை முன்னிட்டு நாட்டிலுள்ள மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையை மதுவரித் திணைக்கள (Excise Department of Sri Lanka) ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா (Udaya Kumara Perera) வெளியிட்டுள்ளார்.
மேற்படி அறிக்கையில், அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க மே மாதம் 12 ஆம் திகதி வரும் வெசாக் பௌர்ணமி போயா தினத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் தேசிய வெசாக் விழாவை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை
இதன்படி, மே மாதம் 11 ஆம் திகதி இரவு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் நேரத்திலிருந்து மே மாதம் 15 ஆம் திகதி திறக்கப்படும் நேரம் வரை நாட்டிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதற்கான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு இது உதவியாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக, 1913 என்ற இலக்கத்தினூடாகவும் 0112-877688 என்ற தொலைநகல் மூலமாகவும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும், நாடு முழுவதும் அமைந்துள்ள கலால் அலுவலகங்கள் மற்றும் விசேட கண்காணிப்புப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகளை வழங்குமாறு மதுவரித் திணைக்கள ஆணையர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

