மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவுடன் தொடர்புடைய சுப்ரீம் செட் செய்மதி விவகாரத்தில் முதலீட்டுச் சபை பணிப்பாளர் நாயகத்துக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
செய்மதி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ச, சீன நிறுவனம் ஒன்றுடன் கூட்டிணைந்து சுப்ரீம் செட் எனும் பெயரிலான செய்மதியொன்றை விண்வெளிக்கு அனுப்பியிருந்தார்.
குறித்த செய்மதியை விண்வெளிக்கு அனுப்ப பொதுமக்களின் வரிப்பணம் செலவழிக்கப்பட்டதாக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்கள் நீண்ட காலமாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது ரோஹிதவுடன் தொடர்புடைய சுப்ரீம் செட் செய்மதியை விண்வெளிக்கு ஏவிய செயற்பாட்டில் அரசாங்க நிதி ஒருசதமும் செலவழிக்கப்படவில்லை என்றும் அதற்குப் பதிலாக குறித்த செய்மதி மூலம் நாட்டுக்கு ஆண்டு தோறும் வருமானம் கிடைக்கப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வாய்மூலமான கேள்வியொன்றுக்கான பதிலின் போது குறிப்பிட்டிருந்தார்.
தவறான தகவல்
எனினும் முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன் சுப்ரீம் செட் செய்மதி தொடர்பான தவறான தகவல்களை வழங்கி பிரதமரை தவறாக வழிநடத்தியதாக ஆளுங்கட்சி இப்போது குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது,
அதன் அடுத்த கட்டமாக குறித்த செய்மதி விவகாரம் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் ரேணுகா வீரகோனுக்கு எதிராக விசாரணையொன்றை நடத்த ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் தற்போது தீர்மானித்துள்ளனர்.
குறித்த விசாரணை நிறைவடையும் வரை ரேணுகா வீரகோனை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து இடைநிறுத்தி கட்டாய விடுமுறையில் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரேணுகா வீரகோன் குறித்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் நியமிக்கப்பட்ட விடயத்தையும் அவருக்கு எதிரான விசாரணை தொடர்பில் ஆளுங்கட்சி தற்போதைக்கு தூக்கிப்பிடித்துள்ளது.
மிக விரைவில் ரேணுகா வீரகோன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படவுள்ளதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.