வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர்; அருண்
ஹேமச்சந்திரா, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையகத்தின் சர்வதேச
கூட்டாண்மைகளுக்கான பணியகத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பகுதிக்கான பணிப்பாளரை
சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பாதை மற்றும் ஐரோப்பிய
ஒன்றியத்தின் உலகளாவிய நுழைவாயில் முயற்சியின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள்
குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, சர்வதேச கூட்டாண்மைகளுக்கான பணியகத்தின் ஆசிய மற்றும் பசுபிக்
பகுதிக்கான பணிப்பாளர், இலங்கையின் சமீபத்திய முன்னேற்றம் குறித்து
பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உறுதிப்பாடு
நாட்டில் வளர்ந்து வரும் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய நிர்வாகம் மற்றும்
பொருளாதார முகாமைத்துவத்தில் மேம்பட்ட முன்கணிப்புத்தன்மை என்பவற்றை அவர்
எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட
பொறுப்பான சீர்திருத்தங்களுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை இணை அமைச்சர்
ஹேமச்சந்திரா இதன்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை நிலையான உட்கட்டமைப்பு, டிஜிட்டல் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க
எரிசக்தி, திறன் மேம்பாடு மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி
உள்ளிட்ட பல முன்னுரிமைப் பகுதிகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இரண்டு
தரப்புக்களும் இணக்கம் வெளியிட்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு
தெரிவித்துள்ளது.

