அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (08) பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாரும் இது வரை ஏன் அவரை நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தவில்லை என்பதை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் விளக்கி அறிக்கை
சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சர்வதேச உடன்படிக்கை
கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவியின் போது
வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக்
கொல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக
2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை காவல் நிலையத்தில் சட்டத்தரணி
தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்பின்பு, சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச
உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு தவணை
இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள்
அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை
கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக குறித்த வழக்கு நேற்று (08) மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது குறித்த தேரர் நீதிமன்றில்
சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக முன்னலையான சட்டத்தரணி சட்டமா
அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது
செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர்
குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு
உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அறிக்கை
சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
