யாழ்ப்பாணம் – செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்கு தூபியை சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் இன்று (08.12.2025) குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள்
சக்தியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
சேதமாக்கப்பட்ட நினைவுத்தூபி
செம்மணியில் மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்ட அணையாவிளக்கு நினைவுத்தூபி இனந்தெரியாதோரால் இரண்டாவது முறையாக நேற்று (07) சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தூபி இரண்டு மாதங்களுக்கு முன்னரும் விசமிகளால் சேதமாக்கப்பட்டிருந்த நிலையில் புனரமைப்பு செய்யப்பட்டது.
இந்தநிலையில் அணையா விளக்கு தூபி மீண்டும் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
