Home உலகம் இந்தியாவில் பரபரப்பு : கர்நாடக முன்னாள் முதலமைச்சருக்கு பிடியாணை

இந்தியாவில் பரபரப்பு : கர்நாடக முன்னாள் முதலமைச்சருக்கு பிடியாணை

0

கல்வி தொடர்பாக நீதி கேட்கச் சென்ற 17 வயது பாடசாலை மாணவியை தகாத முறைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவிற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் 54 வயது தாயார், கடந்த மார்ச் 14ம் திகதி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார்.

அதன்பேரில், 2 பிரிவுகளின் கீழ் எடியூரப்பா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

குறைகளை சில நிமிடங்கள் கேட்ட எடியூரப்பா

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில், “கல்வி தொடர்பாக தனது மகளுக்கு நீதி கிடைக்க எடியூரப்பாவின் உதவியை நாட அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது எங்களது குறைகளை சில நிமிடங்கள் கேட்ட எடியூரப்பா, பின்னர் எனது மகளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று தகாத முறைக்கு உட்படுத்தியதாக” குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு, பெங்களூரு காவல்துறையிடமிருந்து சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சி.ஐ.டி. அதிகாரிகள் எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பதிவுசெய்தனர்.

எடியூரப்பாவுக்கு பிடியாணை 

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. நேற்று(12) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், 17 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய வழக்கில் எடியூரப்பாவுக்கு பிடியாணை பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/arrest-warrant-against-former-cm-yediyurappa-1718283562

NO COMMENTS

Exit mobile version