மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அபாயம்
ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டள்ளன.
இதேநேரம் மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக பொதுமக்களை அவதானமாக
செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை
இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச்
சுழற்சிகள் இன்று இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம்
பெற்றுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவி
வருகின்றது.
இன்று காலையில் காற்றுடனான கடும் மழைபெய்துவரும் நிலையில் மட்டக்களப்பு
மாவட்டத்தில் சில பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
முட்டக்களப்பு மாவட்டத்தின் நவகிரிகுளத்தின் வான்கதவு இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு-மண்டூர் பிரதான வீதி,பாலையடிவட்டை வெல்லாவெளி வீதி ஆகியவற்றின்
ஊடாக இரண்டு அடிக்கும் மேல் வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்துகள்
பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று பொறுகாமம் ஊடாக பிரதேதேசபைக்கு இடைப்பட்ட பிரதான வீதி ஊடாக நீர்
பாய்வதன் காரணமாக சிரமங்களுக்கு மத்தியில் மக்கள் பயனங்களை
முன்னெடுத்துவருகின்றனர்.
இதேநேரம் கா.பொ.த.உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய தினம்
பரீட்சைம ண்டபங்களுக்கு செல்வதற்கு மாணவர்கள் பல்வேறு கஸ்டங்களை
எதிர்நோக்கியதை காணமுடிந்தது.
இதேபோன்று தொடர்ச்சியாக பெய்துவரும் கடுமையான மழை காரணமாக மட்டக்களப்பு
மாவட்டத்தில் விவசாய செய்கையும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
தூழ்நிலங்களில் உள்ள வயல்நிலங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய நிலையில்
விவசாயிகள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் காற்றுடன் கூடிய மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக அவதானமாக
செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வலியுறுத்தியுள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை சில நாட்களுக்கு நீடிக்கும் நிலையுள்ளதனால் பொதுமக்களை
அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேபோன்று தாழ்நிலப்பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளுக்கு அண்மையில் வசிக்கும்
மக்கள் வெள்ள அபாயம் நிலவும் சூழ்நிலை காணப்படுவதன் காரணமாக அறிவுறுத்தல்களை
பின்பற்றுமாறு நீர்பாசனத்திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அம்பாறை..
அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை
காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்தும்
பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள்
உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர்,
அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி சாய்ந்தமருது, பாண்டிருப்பு,
கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை மல்வத்தை போன்ற பிரதேசங்களும்
தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக்
காணப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடும்
காற்று அழுத்தத்தால் போக்குவரத்து மின்சாரம் தடைப்பட்டு பொதுமக்களுக்கு
கடும் இடையூறு ஏற்பட்டது.
இது தவிர சவளக்கடை கிட்டங்கி வீதி காரைதீவு
மாவடிப்பள்ளி வீதிகள் மீண்டும் வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளது. தொடர்ச்சியாக
அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் போக்குவரத்து பாதிப்ஏற்பட்டுள்ளதுடன்
பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அம்பாறை
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில்
வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் பலவும் நீரில் மூழ்கி
வருகின்றன.மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப்
பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும்
உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை
நேற்றுமுன்தினம் (25) இரவு முதல் கந்தளாய் பிரதேசத்தில் இடைவிடாது பெய்து
வரும் கனமழையின் காரணமாக, பேராறு இரண்டாம் கொலனி, மூன்றாம் கொலனி, மற்றும்
மதுரசா நகர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வடிகால்களில் நீர் நிரம்பி வழிவதனால், ஒரு சில பகுதிகளில் வீதிகள் மற்றும்
தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதிகளில்
வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக, கந்தளாய் பிரதேச சபையூடாகப்
பேராறு வடிகான்களைச் சுத்தம் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
பேராறு மேற்கு அமைப்பாளர் ஏ.எம். அலீம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த
துப்பரவுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது, கந்தளாய்
பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ஐ.எம். பைரூஸ் அவர்களும் கலந்துகொண்டு பணிகளை
மேற்பார்வையிட்டார்.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள
மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் அவதி
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயல பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை
தி/பாதிமா பாலிகா வித்தியாலயத்துக்கு செல்லும் வீதியானது கனமழை காரணமாக
மூழ்கியதால் இன்று (26)பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
குறித்த பாடசாலைக்கு செல்லும் வீதியானது நீரினால் மூழ்கடிக்கப்பட்டதால்
பாடசாலை மாணவர்கள் மழையையும் வெள்ள நீரையும் பாராது குறித்த வீதி ஊடாக நீரில்
நனைந்து பாடசாலைக்கு சென்று வீடு திரும்பினர்.
மேலும் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில்
பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததுடன் மின்சார கம்பிகளும் தடைப்பட்டதுடன்
போக்குவரத்தும் சில மணி நேரம் தடைப்பட்டது.
பின்னர் பொலிஸார் வீதி அபிவிருத்தி
அதிகார சபை ஊழியர்கள் இணைந்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. கனமழை
காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
முள்ளிப்பொத்தானை,4ம்
வாய்க்கால் பாலம்போட்டாறு உட்பட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில்
மூழ்கியுள்ளன. குறித்த பகுதியின் மேலதிக நீரை வெளியேற்ற தம்பலகாமம் பிரதேச
செயலாளர் ஜெ.ஸ்ரீபதி மற்றும் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி களத்துக்கு
சென்று உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நுவரெலியாவில் வெள்ளம் – போக்குவரத்தும் விவசாயமும் பாதிப்பு
சீரற்ற வானிலை, தொடர் கனமழையால் காரணமாக இன்று (26) நுவரெலியாவில் பல தாழ்நில
பிரதேசங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் , பல பிரதேசங்களில் பிரதான
வீதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
பிரதான வீதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நுவரெலியா- உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை கோர்ட்லோட்ஜ்
சந்தியின் புதிய வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியதால் போக்குவரத்து
தடைப்பட்டுள்ளது எனவும் இதனால் சிறிய ரக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது என கந்தபளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பாக நுவரெலியா கந்தபளை, ஹைபொரஸ்ட் , ராகலை, நானுஓயா போன்ற பிரதேசத்தில்
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில்
மழைநீர் தேங்கியுள்ளதனால் அறுவடைக்கு தயாரான மரக்கறிகளும் அழிவடைந்துள்ளது.
மேலும் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் பொது மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள
நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.
இதேவேளை நுவரெலியாவில் பிரதான வீதிகளில் முறிந்து வீழ்ந்த மரங்களை நுவரெலியா
மாநகரசபையின் தீயணைப்பு படையினர் வெட்டி அகற்றிவருகின்றனர்.
