இந்தியாவின் டெல்லி – மும்பை விரைவுச்சாலையில், இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பேருந்தானது டிரெய்லர் வாகனம் ஒன்றுடன் மோதி தீப்பிடித்த நிலையில் விபத்து சம்பவித்துள்ளது.
நேற்று இரவு சுமார் 2:30 மணியளவில், ரிஷிகேஷிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூருக்கு அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் ஏற்பட்ட குறித்த விபத்தில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
பெரும் தீப்பிழம்பு
இதன்போது பயணிகள் உதவிக்காக அலறியபோது, வாகனங்கள் பெரும் தீப்பிழம்புகளுடன் எரிந்ததாக இந்த ஊடகங்கள் விவரித்துள்ளன.
உயிரிழந்த பெரும்பாலான பயணிகள் சம்பவம் நடந்த நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியிலும், மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை உள்ளடக்கிய, காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக தௌசா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், பேருந்து ஓட்டுநர் தூங்கியிருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மீட்பு மற்றும் தீயணைப்புப் படை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்குத் தாமதமாக வந்ததால், மேலும் பலர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மேலும், பேருந்தின் சேமிப்புப் பகுதி சிகரெட் பாக்கெட்டுகளால் நிரம்பியிருந்ததாகவும், அதுவே தீ வேகமாகப் பரவக் காரணமாக அமைந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
Source: https://ibctamil.com/article/bus-accident-in-india-at-midnight-1782894440
