Home இலங்கை பொருளாதாரம் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

0

நாட்டில் வறுமை ஒழிப்புக்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ள ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று(25.02.2025) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தற்போது இலங்கை சனத்தொகையில் ஆறில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வதுடன், அவர்களில் 95.3 வீதமானோர் கிராமிய மற்றும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர்.

பொருளாதாரத்திற்கு பாதக விளைவு

கடந்த கால அரசாங்கங்களால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் வெற்றியடையவில்லை என்பதை காண முடிகின்றது.

வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கான பயனாளர்களாக 2000ஆம் ஆண்டில் 1.10 மில்லியன் பேரும் 2010ஆம் ஆண்டில் 1.57 மில்லியன் பேரும் 2024ஆம் ஆண்டில் 1.79 மில்லியன் பேரும் உள்ளனர்.

இவ்வாறு பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வது பொருளாதாரத்திற்கு பாதக விளைவை ஏற்படுத்தும்.

அமைச்சரவை அங்கீகாரம்

அதனால், இடர்களுக்கு முகம்கொடுப்பவர்களை மட்டும் திட்டத்தின் பயனாளர்களாக உள்வாங்கி ஏனையவர்களை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான முனைப்பான பங்காளர்களாக மாற்றுவதே எமது திட்டம் ஆகும்.

இதற்கமைய, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/cabinet-approves-praja-shakti-program-sri-lanka-1740476325

NO COMMENTS

Exit mobile version