வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க வைத்தியசாலைகளில் ஒரு சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிதி மோசடியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மருந்துகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கும். அதே போன்று நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றவுடன் வைத்தியர்களால் கோரப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மருந்துகள் வழங்குவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், பிராந்திய நிறுவனங்களின் பிரதானிகள் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒரு முறை உருவாக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிபுணர் கோரிக்கை விடுத்த பிறகு, மருந்து கலவையாளரின் ஒப்புதலுடன் வைத்தியசாலை பணிப்பாளர் அதை மருந்து வழங்கல் பிரிவிடம் சமர்ப்பிக்கலாம்.
முந்தைய சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் செய்யப்பட்ட கடுமையான நிதி மோசடியால் சுகாதார அமைச்சு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://tamilwin.com/article/cannot-provide-all-requested-medicines-1788076894
