Home இலங்கை சமூகம் செம்மணி புதைகுழி நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல்

செம்மணி புதைகுழி நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல்

0

செம்மணி புதைகுழி நீதிக்காக பிளவுகளை உண்டு பண்ணும் அரசியலை தவிர்த்து தமிழ்
தேச மக்களாக எழுந்து நிற்க அரசியல் தலைமைகள் ஒன்று பட வேண்டும் என சமூக
நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய
அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (4) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செம்மணி சமூக புதைகுழியில் இருந்து தினமும் அகழ்ந்தெடுக்கப்படும் மனித
எச்சங்கள் மனித உள்ளம் கொண்டவர்களை அதிர்ச்சிகுள்ளும் ஆழ்ந்த வேதனைக்குள்ளும்
தள்ளுவதோடு படுகொலை செய்யப்பட்டோரின் அவல குரல் நீதியை தேடும் மக்களின்
இதயத்தை தட்டிக் கொண்டிருக்கின்றது.

தமிழர்களுக்கு நீதி

இந்தநிலையில், கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் தண்டனை
அனுபவிக்கும் சோம ரத்தின ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதி, பிரதம மந்திரி, நீதி
அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள சர்வதேச விசாரணைக்கான கடிதம் பேரினவாத இன
அழிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் துணை நிற்கும் இலங்கையின் நீதித் துறை,
அரசியல் அதிகாரம், அரசியல் கட்டமைப்பு தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டப்
போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி உள்ளது.

கடந்த காலங்களில் நாட்டின் அரசியல் அவலங்களையும், அரசியல்வாதிகளின் அதிகார
துஸ்பிரயோகங்களையும் மட்டும் அல்ல யுத்த அவலங்களையும் வெளிக்கொண்டு வந்து
தமிழர்களுக்கு நீதிக்கான குரலாக உண்மையை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்கள்,
சாட்சிகள், சட்டத்தரணிகள் காணாமலாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர்,  விசேடமாக
கிரிசாந்தி கொலை வழக்கின் சட்டத்தரணியாக முன் நின்ற குமார் பொன்னம்பலம்
அவர்கள் பட்ட பகலில் நடுவீதியில் கொலை செய்யப்பட்டமை உலகமே அறிந்த
விடயம்.

அதற்கான நீதி விசாரணையை பேரினவாத ஆட்சியாளர்கள் புதைகுழியில்
தள்ளியுள்ள நிலையிலேயே கிரிசாந்தி கொலை வழக்கில் குற்றவாளியாய் சிறை தண்டனை
அனுபவிக்கும் சோம ரத்தின ராஜபக்ச 400க்கு அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டு
செம்மணியில் விதைக்கப்பட்டுள்ளமைக்கு சாட்சியாக இன்றும் உள்ளதோடு தற்போது
சர்வதேச விசாரணை வேண்டும் என மனைவி மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கும்
நிலையில் அக் குற்றவாளியின் உயிர் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு நீதிக்கான
மக்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.

தமிழின படுகொலையோடும் யுத்த குற்றங்களோடும் தொடர்புபட்ட படைத்தரப்பின் உயர்
மட்ட அதிகாரிகள் கடந்த கால ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டதோடு
கௌரவ பட்டம் பதவி உயர்வு வழங்கப்பட்டதையும் இராஜதந்திர அந்தஸ்தோடு
வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டதையும் நாம் அறிவோம்.

இனப்படுகொலை

இந்தப் பின்னணியில் கொலை குற்றத்தண்டனை கைதியான சோமரத்தின தனது மனைவி மூலம்
தமக்கு நீதி கிட்டவில்லை, தண்டிக்கப்பட வேண்டிய உயர் அதிகாரிகள்
தண்டிக்கப்படவில்லை, இலங்கையின் நீதி விசாரணையில் நம்பிக்கை இல்லை, சர்வதேச
விசாரணை வேண்டும், அங்கு நான் சாட்சி கூற ஆயத்தமாக உள்ளேன்” என கூறியுள்ளமை
இதுவரை காலமும் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்து சர்வதேச நீதி விசாரணையை
கோரி நிற்கும் தமிழர்களின் குரலுக்கு வலு சேர்பதாகவே உள்ளது.

கறுப்பு ஜூலை 83 இனப்படுகொலை நினைவு நாளில் குத்தாட்டத்தோடு உல்லாச பயணம்
மேற்கொள்ள அரச ஆதரவளித்த தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில்
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடக்கும் ஆனால் எவரும் தண்டிக்கப்பட
மாட்டார்கள் என அறிவித்தவர் சோம ரத்னவின் மனைவியின் கடிதத்திற்கு உண்மை
உள்ளவராக இருப்பாரா? இனப்படுகொலையாளிகளான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
பண்டார நாயக்கர், மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு ஆதரவளித்து இனப்படுகொலையை
அங்கீரத்ததோடு படையினரின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வதேச
விசாரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்பது தெளிவு.

எனினும் இக் கடிதம்
ஆட்சியாளர்களுக்கு சவாலே.பதில் கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.நாங்களும்
அதனை உறுதி படுத்துகிறோம்.

தமிழ் அரசியல் தலைமைகள் சர்வதேச விசாரணைக்கான ஒரு துரும்புச் சீட்டாக
சோமரத்னவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தை பாவித்து சர்வதேசத்திற்கு
ஒருமித்த குரலோடு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

செம்மணி சமூக புதைகுழி
இனப்படுகொலையின் கொடூரத்தை மறந்தவர்களாக இருந்த எம்மை எம் ஈழ மண் எழுச்சியுற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்து நீதிக்கான குரலாக நாம் ஒன்று திரள
அழைக்கையில் பிளவுகளை உண்டு பண்ணும் அரசியலை தவிர்த்து தமிழ் தேச மக்களாக
எழுந்து நிற்க அரசியல் தலைமைகள் ஒன்று பட வேண்டும் என்பதை மீண்டும்
வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை – திருவிழா

NO COMMENTS

Exit mobile version