பாலியாறு நீர்த்திட்டம் மக்களின் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்யும்
முகமாகவே திட்டமிடப்பட்டுள்ளது என நகர அபிவிருத்தி நிர்மாண மற்றும் வீடமைப்பு
அமைச்சர் அனுர கருணா திலக தெரிவித்துள்ளார்.
பாலியாறு நீர்த்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (13) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
குறைந்த அளவிலான நீர் வளம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மன்னார் மற்றும்
யாழ்ப்பாணம் மாவட்டங்கள் மட்டுமே குறைந்த அளவிலான நீர் வளங்களை
பெற்றிருக்கின்றது.
அந்த வகையில்
இந்த பாலியாறு குடி நீர் நீர்த்திட்டம் பூர்த்தியடைந்ததும், மன்னார்
மாவட்டத்திற்கும் யாழ்ப்பாணத்துக்கும் குடிநீரை வழங்க முடியும்.
இந்த திட்டம் நிறைவேறிய பிறகு, சுமார் 4.15 இலட்சம் மக்களுக்கு குடி நீர்
வழங்குவது சாத்தியமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் நீர்த் தேக்கம் சுமார் 828
ஹெக்ரெயர்கள் பரப்பளவில் இருக்கும்.
சுற்றுச்சூழல் பாதிப்புகள்
மேலும், இது 256 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியது.
இதனால் சுற்றுச்சூழலுக்குச் சில பாதிப்புகள் ஏற்படலாம். ஆனாலும் அந்தத் தாக்கங்களைக் குறைக்க நாம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.
இன்று வனவளத் துறையினர் மற்றும் அதிகாரிகள் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தல்
தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு ஒப்புக்கொண்டது
மகிழ்ச்சியளிக்கிறது.
அந்த ஆய்வுகளின் முடிவில் சில பரிந்துரைகள் வரக்கூடும்.
அந்தப் பரிந்துரைகளைப் பின்பற்றி, இத்திட்டத்தை விவசாயிகளுக்கும், சுற்றுச்
சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுத்தவுள்ளோம் என்றார்.
