யாழ் போதனாவில் (Teaching Hospital Jaffna) ஆறு மாதங்களாக கோமாவில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேச செயலாளர் நேற்று (31) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடு – கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த சகாயராஜா யேசுதாஸ் பெரேரா (வயது 35) என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோமா நிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த பிரதேச செயலாளர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அநுராதபுரம் வீதியில், மோட்டார்
சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நடந்து சென்றவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதன்போது, நடந்து சென்ற நபர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் குறித்த
பிரதேச செயலாளர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
இதன்பின், மதவாச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மரண விசாரணை
அங்கு இரண்டு மாதங்கள் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நான்கு மாதங்கள் கோமா நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று (31) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்
மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
