இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் வீதிகள் மற்றும்
பாலங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தற்போது அண்ணளவாக மதிப்பிடப்பட்டதன்
அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபா
நட்டம் ஏற்பட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர
அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை முழுமையாக சீரமைக்கும் போது
மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய புனரமைப்புப் பணிகளுடன் சேர்த்து, அதற்காக சுமார்
190 பில்லியன் ரூபா தேவைப்படும் என்றும் அதிகாரிகள் மேலும்
குறிப்பிட்டுள்ளனர்.
சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு
நாட்டில் நிலவும் அனர்த்தத்தின் தன்மையை ஆய்வு செய்வதற்கும், அதனால் ஏற்படும்
சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும் எடுக்க
வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக உட்கட்டமைப்பு வசதிகள்
மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு நாடாளுமன்ற
உறுப்பினர் எஸ். எம். மரிக்காரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இந்த
விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இதன்போது இங்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர
அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், இந்த அனர்த்த நிலைமையால் வீதி அபிவிருத்தி
அதிகார சபையின் கீழ் உள்ள 316 வீதிகளுக்கும் 40 பாலங்களுக்கும் சேதம்
ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினர்.
இருப்பினும், இங்கு குழுவின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், தொடருந்து பாதைகள்
மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரதேச வீதிகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும்
மதிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
பிரதேச வீதிகளை மீண்டும் சீரமைக்கும்போது அதற்கான நிதியைப் பெறுவதற்கு
அமைச்சின் தலைமையில் ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும்
குழுவின் தலைவர் இங்கு வலியுறுத்தினார்.
அதற்கமைய, தற்போது உலக வங்கி மூலம் 2 பில்லியன் ரூபா கடனாகப் பெறுவதற்கு
எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் பல நிறுவனங்களிடமிருந்து இந்தப்
புனரமைப்புகளை மேற்கொள்ளத் தேவையான நிதியைப் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும்
அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டம்
அத்துடன், இந்த அனர்த்த நிலைமையால் இலங்கை மின்சார சபைக்குச் சுமார் 20
பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று அதன் அதிகாரிகள் குழுவில்
குறிப்பிட்டனர்.
உலக வங்கியிடமிருந்து இதற்காக ஒரு கடன் தொகையைப் பெறுவது
குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என்றும் அந்த அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், அந்தத் தொகையை கடனாகப் பெறாமல்,
ஒரு மானியமாகப் பெற முயற்சிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின்
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கடன் தொகையாக அந்த நிதியை பெறுவதன் மூலம்
பாவனையாளர்களின் மின்சார கட்டணத்தில் ஒரு அதிகரிப்பு ஏற்படக்கூடும்
என்பதால், அந்த தொகையை மானியமாக பெறுவதன் முக்கியத்துவத்தை அவர்
வலியுறுத்தினார்.
அத்துடன், வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்துக்கும் இந்த
அவசர அனர்த்த நிலைமை காரணமாக தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார்
252 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று அதன் அதிகாரிகள் குழுவில்
தெரிவித்தனர்.
அந்தத் திருத்தப் பணிகளுக்குச் செலவிடப்படும் தொகையை
அவர்களுக்காக வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம்
மீட்டெடுக்க முடியும் என்பதால், மேலதிக கடன் அல்லது மானியம் எதுவும்
தேவையில்லை என்று வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) நிறுவனத்தின்
அதிகாரிகள் குழுவில் மேலும் குறிப்பிட்டனர்.
அவசர அனர்த்த நிலைமை
இதேவேளை, இந்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும்
வடிகாலமைப்புச் சபைக்கு தற்போது மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 5.6
பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று அதன் அதிகாரிகள் குழுவில்
தெரிவித்தனர்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 156 நீர்
வழங்கல் திட்டங்கள் சேதமடைந்துள்ளன எனவும், அவை அனைத்தும் பராமரிப்பு
செய்யப்பட்டு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன எனவும் வீடமைப்பு, நிர்மாணிப்பு
மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குழுவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை ஆசிய அபிவிருத்தி
வங்கி மூலம் மானியமாகப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும் செயலாளர் கூறியுள்ளார்.
அதற்கமைய, இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், எதிர்காலத்தில்
ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத்
தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், உட்கட்டமைப்பு வசதிகள்
மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவானது அதற்குத்
தேவையான ஆதரவை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு
வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார ஜயமஹ, அஜித் பி.
பெரேரா மற்றும் அசித நிரோஷன எகொட விதான ஆகியோரும் அதிகாரிகள் சிலரும்
கலந்துகொண்டனர்.
