ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மாத்தறை, கொடகமவில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் ருமேனியாவில் தொழில்வாய்ப்பு வழங்குவதாக பணம் பெற்றுக்கொண்டதாகவும், அந்த வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை எனவும் பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
குறித்த சந்தேக நபர் மோசடி செய்த தொகை 130 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவின் தகவல்
கேள்விக்குரிய குறித்த வேலைவாய்ப்பு நிறுவனம் முன்பு அரச பணியகத்தின் பதிவுசெய்யப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனமாக ஆரம்பத்தில் காணப்பட்டுள்ளது எனவும், முகவர்களின் வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் பிப்ரவரி 29 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது என்றும், புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அது மீண்டும் குறித்த முகவர், வேலைவாய்ப்பு உரிமத்தைப் புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முறைப்பாட்டினை விசாரிப்பதற்காக குறித்த வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் உரிமையாளர் பணியகத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்று பணியக சட்டத்தில் உள்ள உரிம நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து , தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், பயணத்தடையும் விதித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் இணையதளமான www.slbfe.lk ஐப் பார்வையிடவும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சரியான உரிமம் முகவர்களுக்கு உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் செல்லுபடியாகும் வேலைவாய்ப்பு நிறுவனமா மற்றும் உரிமம் பெற்றுள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
Source: https://tamilwin.com/article/employment-in-a-european-country-immigration-dep-1718408546
