திருகோணமலை வெருகல் – பூநகர் பகுதியில் மழை இல்லாத காரணத்தினால், மழையை
நம்பிச் செய்யப்பட்ட மானாவாரி வேளாண்மைகள் கருகி வருவதால் விவசாயிகள் மிகுந்த
மனவேதனை அடைந்துள்ளனர்.
இந்த துயரமான சூழ்நிலையில், மழையைப் பெறுவதற்காகவும், மனிதர்கள் செய்த
பாவங்களே மழை பொய்க்கக் காரணம் என்ற நம்பிக்கையிலும், அப்பகுதியில் பாரம்பரிய
முறைப்படி மனித கொடும்பாவி இழுத்துச் செல்லப்பட்டு எரிக்கும் நிகழ்வு
நேற்றிரவு (4) இடம்பெற்றது.
வெருகல் – பூநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு இந்தச் சடங்கை
முன்னெடுத்ததுடன் மனித கொடும்பாவியை வீதிகளில் இழுத்துச் சென்றனர்.
விவசாயிகள் கவலை
அப்போது, மக்கள் அனைவரும் ஒன்றுசேர ஒப்பாரிப் பாடல்களைப் பாடி தங்கள்
துயரத்தையும், மழை வேண்டிய வேண்டுதலையும் வெளிப்படுத்தினர்.
இறுதியில், மனித கொடும்பாவியைத் தீயிட்டு எரிக்கும் பாரம்பரிய நிகழ்வை நடத்தினர்.
மழை இன்மைக்கு மனிதன் செய்த பாவங்களே காரணம் என்றும், அந்தக் கொடும்பாவி
எரிப்பதன் மூலம் பாவங்கள் நீங்கி மழை பெய்யும் என்றும் அப்பகுதி மக்கள்
உறுதியாக நம்புகின்றனர்.
இந்த பாரம்பரியச் சடங்கு, வறட்சியில் வாடும் விவசாயிகளின் ஆழ்ந்த
நம்பிக்கையையும், வேதனையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
