சீனாவில் (China) வணிக வளாகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் சிச்சுவான் (Sichuan) மாகாணத்தின் சிகொங் நகரில் உள்ள 14 மாடிக்கட்டிடத்தில் நேற்று மாலை (17) 6 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக சீன அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் பெரும்புகை மண்டலம் வெளிவருவதை காண்பிக்கும் படங்களும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
75 பேர் உயிருடன் மீட்பு
அத்துடன் வணிக வளாகத்தின் மாடியின் முன் பாகத்தில் பெருமளவு மக்கள் காணப்படுவதையும் அதில் காணமுடிந்துள்ளது.
இதேவேளை வணிக வளாகத்திற்கு 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களையும் வாகனங்களையும் அனுப்பியதாகவும் 75 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுமானப் பணிகளின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டமை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வழமையாக இடம்பெறும் தீ விபத்துகள்
சீனாவில் இவ்வாறான சம்பவங்கள் வழமையாக இடம்பெறுவதற்கு பொதுவான பாதுகாப்பு தராதரங்கள் பின்பற்றப்படாமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவளை கடந்த ஜனவரியில் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வணிக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/fire-in-a-shopping-center-in-china-16-people-died-1721285915
