கல்வி பொதுத்தராதர உயர்தர இறுதிப் பரீட்சையில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக பொருளியல் விஞ்ஞானம் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.
கடந்த வாரம் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பொருளியல் விஞ்ஞான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசாரணையை நடத்தியுள்ளது.
இதன் போது இவ்வாறு பரீட்சை வினாத்தாள் கசிவடைந்தமை தொடர்பில் அல்லது முன்கூட்டியே வெளியானமை தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் உரிய கிரமமான விசாரணை நடத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
