Home இலங்கை கல்வி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

0

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளதுடன், புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

எனவே மாணவர்கள், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.

வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்கள்

இதன்பின்னர் வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணித்தியால காலம் முதல் வினாத்தாளுக்காக வழங்கப்படும்.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாகக் குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே விடையளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதனையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Source: https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-today-1786240091

NO COMMENTS

Exit mobile version