கொழும்பு (Colombo) – கிராண்ட்பாஸ் (Grandpass) காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாகலகம் தெரு பகுதியில் கடந்த 17 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், இருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காகவும், உடந்தையாக இருந்ததற்காகவும் ஒரு சந்தேக நபர் ராஜகிரிய காவல்துறை சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக சந்தேக நபரின் மனைவி நேற்று (20.03.2025) கிராண்ட்பாஸ் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கொட்டவில, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.