லெபனானில்(lebanon) தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் விமானப்படை தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டில் தெற்கு புறநகர்ப் பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு கருத்து தெரிவிக்கவில்லை
இந்த தாக்குதலில் விமானப்படை தளபதியான முகமது ஹூசைன் சுரூர் (Mohammad Hussein Surur) என்பவரே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் ஹிஸ்புல்லா அமைப்பு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
சுரூர் 1980 களில் ஹிஸ்புல்லாவுடன் இணைந்தார் மற்றும் இஸ்ரேலை(israel) இலக்காகக் கொண்ட பல ட்ரோன் தாக்குதல்களை “மேற்கொண்டார் மற்றும் கட்டளையிட்டார்” என்று இஸ்ரேல் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக இஸ்ரேல் நடத்திவரும் விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை தொடரும்
இதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பை ஒழிப்பது, அவர்களின் தாக்குதல் உள்கட்டமைப்பைத் தகர்ப்பது மற்றும் ரொக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கும் வரை தமது நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்யோவ் காலன்ட் (Yoav Gallant) தெரிவித்தார்.
“எங்களுக்கு முன்னால் உள்ள பணிகள் தெளிவாக உள்ளன, இஸ்ரேலின் வடக்கு சமூகங்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Source: https://ibctamil.com/article/hezbollah-air-force-unit-killed-in-beirut-strike-1727370085
