மற்றுமொரு இந்திய விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
அனர்த்தத்திற்குப் பின்னர் நாடு முழுவதும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த விமானம் வந்தடைந்துள்ளது.
போக்குவரத்து நடவடிக்கை
பாலம் மற்றும் பாகங்கள் மற்றும் விசேட பணியாளர்களுடனான இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-17 விமானம் இன்று (04) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் கொண்டுவரப்பட்ட பேலி பாலம் மற்றும் பாகங்கள் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்பப் பயன்படுத்த முடிவதுடன், பால கட்டுமானத்திற்கான பொருட்கள், அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய 110 அடி நீளமுள்ள இருவழிப் பேலி பாலங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடல், மீட்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு உதவ ஐந்து சிறு படகுகளும் இதில் அடங்குகின்றன.
தற்காலிக பாலங்கள்
தற்காலிக பாலங்களை அமைப்பதில் பயிற்சி பெற்ற 20 பொறியியலாளர்கள் குழுவும், அனர்த்த நிவாரணப் பணிகளில் உதவ ஐந்து மருத்துவ ஊழியர்களும் இந்தநாட்டுக்கு வந்துள்ளனர்.
25 பேர் கொண்ட இந்தக் குழு உள்நாட்டு பொறியியலாளர்கள் மற்றும் அவசர நிவாரணக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட நிவாரண சேவைகளை வழங்குவதிலும், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதிலும் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை பெரிதும் பாராட்டுகின்றது.
Source: https://tamilwin.com/article/indian-plane-carrying-parts-arrives-in-sri-lanka-1764860614
