ஊடகவியலாளர் நிமலராஜன் யாரிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், என்ன
காரணத்திற்காக குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டது போன்ற விடங்கள், அவர் கொலை
செய்யப்படுவதற்கு முன்னரே வெளிப்படுத்தப்பட்டு இருந்தது என ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் பன்னீர் செல்வம் சிறீகாந் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பல துறைசார் ஆளுமைகள்
மேலும் தெரிவிக்கைகையில், ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை தொடர்பாக பார்ப்போமேயானால், அவர் 2000ஆம் ஆண்டு
ஒக்டோபர் 19ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.

2000 ஒக்டோபர் 10ஆம் வெளியாகிய சுடரொளி பத்திரிகையில் வெளியாகிய செய்தியில்
நிமலராஜனுக்கு எந்த தரப்பினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பதும்
அதற்கான காரணம் என்ன என்பதும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.
அன்றைய காலச்சூழலில் நிமலராஜனுடன் நெருக்கமாக பணியாற்றிய மூத்த
பத்திரிகையாளரினால் விண்ணன் என்ற புனை பெயரில் எழுதப்பட்ட அந்த வி்ளக்கமான
கட்டுரையில் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் நிமலராஜனுக்கும் முரண்பாடு
இருப்பதாகவோ, நிமலராஜனுக்கு ஈ.பி.டிபி. இனால் அச்சுறுத்தல் இருக்கின்றது
என்றோ ஒரு வசனம்கூட சொல்லப்படவில்லை.
இதுதான் உண்மை. இவ்வாறுதான் அனைத்து
குற்றச்சாட்டுக்களும் இட்டுக்கட்டப்பட்டவையாகவே இருக்கின்றன.
ஆனால் ஒரு விடயம். கடந்த காலங்களில் நிமலராஜன் மட்டும் கொலை செய்யப்படவில்லை.
இந்த மண்ணிலே பல துறைசார் ஆளுமைகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவையும்
விசாரிக்கப்பட வேண்டும்.
அனைத்து குற்றச்சாட்டுக்களும் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள்
அவ்வாறான கொலைகளுக்கு உடந்தையாக செயற்பட்ட பல
ஆசாமிகள் இப்போதும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான சில
ஆசாமிகள்தான், எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தூசுதட்டி எம்மை சிக்க வைக்க
ஆர்வமாக செயற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறானவர்கள் ஒன்றை புரிந்து
கொள்ள வேண்டும். ஈ.பி.டி.பி ஐ நோக்கி அவர்கள் சுட்டுவிரலை நீட்டும் போது ஏனைய
நான்கு விரல்களும் அவர்களை நோக்கியே இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது.

எவ்வாறாயினும், எமக்கு எதிரான விடயங்கள் தொடர்பாக மகிழ்ச்சி அடைகின்றோம்.
எமக்கு எதிரான தரப்புக்கள் எதிர்பார்ப்பது போன்று, தற்போதைய அயசியல் சூழலில்
எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படைத் தன்மையோடு நீதியான முறையில்
விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுகின்ற சூழல் உருவாக்கப்படுமாயின் எமக்கு
எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் என்பது
நிரூபிக்கப்படும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது.
எனவே அனைவருக்கும் ஒரு விடயத்தினை தெளிவாக சொல்கின்றோம். எமது செயலாளர் நாயகம்
தோழர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் பகிரங்கமான சவாலாக சொல்கின்றேன் எமக்கு
எதிராக ஆதாரங்கள் இருக்குமாயின் உரிய இடங்களில் அவற்றை முறைப்பாடுகளுக்காக பதிவு
செய்யுங்கள்.
அவை தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே
இருக்கின்றோம். சமூக ஊடகங்கள் ஆதாரங்களை பொருத்தமான இடங்கள் அல்ல என்பதை
தெரிந்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

