Home இலங்கை சமூகம் ஏறாவூர் காவல்துறையினரால் ஊடகவியலாளர் நிலாந்தன் கைது! நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி

ஏறாவூர் காவல்துறையினரால் ஊடகவியலாளர் நிலாந்தன் கைது! நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி

0

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் செயலாளர் செ.நிலாந்தன் ஏறாவூர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்திய நிலையில் அவரை பிணையில் செல்ல ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஊடகங்களில் பிரசுரித்தார் என்பதற்காக முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளரின் அரச கடமைக்கு குந்தகம் விளைவித்தார் என கூறி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தன் மீது பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் ஏறாவூர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் நிலாந்தனை ஏறாவூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காத நிலையில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம் ஞாயிற்றுகிழமையன்று (20) பிற்பகல் 3 மணியளவில் திடிரென அவரது வீட்டுக்குச் சென்ற ஏறாவூர் காவல்துறையினர் அவரை கைது செய்து தடுத்து வைத்தனர்.

வழக்கு விசாரணை

அதனை தொடர்ந்து, திங்கள் (21) காலை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய நிலையில், அவரை பிணையில் செல்ல ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அவர்கள் அனுமதி அளித்ததுடன் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், அரச அதிகாரி ஒருவருக்கு எதிராக நடைபெறும் ஆர்பாட்டங்களை ஊடகங்களில் பிரசுரிப்பது இலங்கையில் ஒரு குற்றம் என கருதி தன் மீது காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்தமையானது இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தானது என ஊடகவியலபளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஊடகவியலாளர் நிலாந்தன் அவரும் அவரது குடும்பத்தினர் பிள்ளைகள் கடந்த ஐந்து வருடங்களாக ஏறாவூர் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த வழக்கு மற்றும் அதன் பிறகு அவர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள ரீதியான சித்திரவதைக்கும் ஆளாகி உள்ளதோடு தன்னை தொடர்ச்சியாக ஊடகத்துறையில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு தனது குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடக்குமுறை

இலங்கையில் புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் மீது நாடாத்தப்படும் இது போன்ற அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கி தங்களால் மேற்கொள்ளப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை வெளியில் வராது தடுப்பதற்கு அரச உயர் பதவிகளில் இருக்கும் முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் போன்றவர்கள் காவல்துறையினரும் சட்டத்தையும் தவறாக பயன்படுத்தி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் இது போன்ற பொய்யான வழக்குகளை விசாரிக்க தடுத்து நிறுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகவியலாளர்கள் மீது நாடாத்தப்படும் இது போன்ற வழக்குகளை முன்னேடுத்துச் செல்வதற்கு ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் உள்ளூர் சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version