உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் வரும் 01.01.2026 முதல் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்படும் எனவும் அதனை மீறும் உணவகங்கள் உள்ளிட்ட
வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் என பருத்தித்துறை
நகரசபை அறிவித்துள்ளது.
உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களை கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன்
இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பருத்தித்துறை நகரசபை
பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்துள்ளார்.
லஞ்ச் சீற் பாவனை
பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் பருத்தித்துறை
நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு
இடம்பெற்ற கலந்துரையாடலில் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ், நகரசபை
நிர்வாக உத்தியோகத்தர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நகரசபை பொதுச்சுகாதார பரிசோகரினால் லஞ்ச் சீற் பாவனை தடை குறித்தும்
உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார
நடைமுறைகள் தொடர்பிலும் விளக்கி கூறப்பட்டிருந்தது.
2026 ஆம் ஆண்டு முதல் உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளக
பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட எந்த செயற்பாடுகளின் போதும் லஞ்ச்
சீற் பயன்படுத்த முடியாது எனவும் அவ்வாறு செயற்படுபவர்கள் மீது நீதிமன்றத்தின்
ஊடாக நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், அதனை மீறி செயற்படும் வியாபார
நிலையங்களின் வியாபார உரிமத்தை நகரபிதாவுக்கு உள்ள அதிகாரத்தின் கீழ்
இடைநிறுத்தப்படும் என தெரிவித்தார்.
லஞ்ச் சீற் பாவனைக்கு மாற்றீடாக உள்ளக பயன்பாட்டில் வாழை இலை, தாமரை இலை,
தேக்கம் இலை போன்றவற்றையும் உணவு பொதியிடலின் போது ஈய பேப்பர் மற்றும் உணவு
பொதியிடலுக்காக அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துமாறு ஆலோசனை
வழங்கப்பட்டது.
நகரசபை அதிரடி
அத்துடன் பருத்தித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட உணவகங்களின் பயன்பாட்டிற்கு
கொள்வனவு செய்யப்படும் இறைச்சி வகைகளை நகரசபைக்கு உட்பட்ட இறைச்சி கடைகளில்
இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கலால் செய்யப்பட்ட இறைச்சிகளை நகரசபைக்கு வெளியே இருந்துதான்
பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதாக முஸ்லிம் உணவக தரப்பினரால்
சுட்டிக்காட்டப்பட்ட போது, அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தந்த உள்ளுராட்சி
மன்றங்களினால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி விற்பனை நிலையங்கள் அல்லது இறைச்சி
கூடங்களில் இருந்து கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பற்றுச்சீட்டை
அவசியம் வைத்திருக்க வேண்டும் எவும் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகரினால்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பருத்தித்துறை நகரசபைக்குட்ட
உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாட்டில் லஞ்ச் சீற்
பாவனை தடை செய்யப்பட்டுள்ளதுடன் 01.01.2026 முதல் முற்றுமுழுதான லஞ்ச் சீற்
பாவனையை தடைசெய்யும் வகையில் மூன்று மாத கால அவகாசம் பருத்தித்துறை நகர
சபையினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கலந்துரையாடலின் போது பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும்
உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள், பருத்தித்துறை வர்த்தகர் சங்க
நிர்வாகத்தினர் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
