வவுனியாவில் (Vavuniya) பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்த நிலையில் அந்தபகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது.
வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீதிமன்றால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் அந்தவீதியில் நிற்பதை அவதானித்த வவுனியா காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்துள்ளனர்.
குழப்பநிலை
இதன்போது அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்ட போது அந்த பகுதியில் தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்து குழப்பம் விளைவித்தார்கள் என தெரிவித்து மேலும் இரண்டு பேரை வவுனியா காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
