Courtesy: ஜோசப் நயன்
இவ்வருடத்திற்கான இறுதி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த குழுக் கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(4) காலை மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான், ஜெகதீஸ்வரன், துரைராஜா ரவிகரன், முத்து முகமது , வடமாகாண பிரதம செயலாளர் எம்.தனுஜா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் இடம் பெற்றுள்ளது.
ஆராயப்பட்ட விடயங்கள்
குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக போக்குவரத்து, வீதி புனரமைப்பு, சுகாதாரம், குடிநீர் உள்ளடங்களாக பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
அத்தோடு, மன்னார் மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துகூட்டத்தில் கலந்துரையாட பட்டதோடு, அந்த திணைக்களத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
அதன்போது, பிரதேச செயலாளர்கள், நகர சபை, மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
