நாட்டின் சில பகுதிகளில் கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவர அறிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய்.
உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1710 குடும்பங்களைச் சேர்ந்த 5443 அங்கத்தவர்கள் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வீடு முழுமையாக சேதம்
அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு சீரான காலநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் வீடு திரும்பிய நிலையில் தற்போது 354 குடும்பங்களைச் சேர்ந்த 1114 அங்கத்தவர்கள் சாவகச்சேரியில் 07 பாதுகாப்பு நிலையங்களிலும் சங்கானையில் 02 பாதுகாப்பு நிலையங்களிலும் தெல்லிப்பளையில் 02 பாதுகாப்பு நிலையங்களிலும் உடுவிலில் 01 பாதுகாப்பு நிலையத்திலும் மொத்தமாக 12 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.
3715 குடும்பங்களை சேர்ந்த 11751 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை 2 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 370 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதே வேளை 31 மீன்பிடி படகுகள் 30 வலைகள் சேதமடைந்துள்ளதாக பிரதேச செயலாளர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
செய்தி – பிரதீபன்
