‘டிட்வா’ சூறாவளியின் போது ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) அதிகாரிகள் அம்புலுவாவ பகுதியில் ஏழு மணி நேரம் முழுமையான ஆய்வு நடத்தியுள்ளனர்.
அம்புலுவாவ மலையின் பிரதான நுழைவாயிலில் குழுவின் ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது. மலையின் பல பகுதிகளில் விரிசல்கள், மலைக்கு செல்லும் வீதியில் மண்சரிவு மற்றும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மலையில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள்
மலையின் முக்கிய இடங்களில், 10 அங்குல அகலத்திற்கும் அதிகமான வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் மண்சரிவுகள் ஏற்படும் ஆபத்து காணப்படுவதாகவும் கட்டிட ஆராய்ச்சி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆய்வின் போது, அதிகாரிகள் கோபுரப் பகுதியை ஆய்வு செய்யவிருந்தபோது, அம்புலுவாவ நுழைவாயிலில் இருந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தைத் தடுத்து நிறுத்தி, அவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
பத்திரிகையாளர்களை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
அம்புலுவாவவில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று, ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டி, அவர்கள் சென்ற வாகனத்தைத் தாக்க முயன்றதாகவும் தெரியவந்துள்ளது.
