எரிபொருள் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயரக்கூடும் என பேங்க் ஒஃப் அமெரிக்கா (Bank of America – BoFA) எச்சரித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது குறித்த உடன்பாடு எட்டப்படாவிட்டால் இந்நிலைமை தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வராத சூழலிலும், உலகின் மிக முக்கியமான இந்த எண்ணெய் போக்குவரத்துப் பாதை போருக்கு முந்தைய நிலையை அடையாமல் இருக்கும் பின்னணியிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான பற்றாக்குறை
போருக்கு முன்னர் தினமும் 140 கப்பல்கள் வரை ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த நிலையில், தற்போது தினமும் 5 முதல் 10 கப்பல்கள் மட்டுமே பயணிப்பதாக பேங்க் ஒஃப் அமெரிக்காவின் சரக்கு மற்றும் வழித்தோன்றல்கள் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் பிரான்சிஸ்கோ பிளான்ச் (Francisco Blanch) தெரிவித்துள்ளார்.
தற்போது சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியே கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதால், உலகளாவிய எரிபொருள் சந்தையை ஸ்திரப்படுத்த தினமும் 80 முதல் 100 கப்பல்கள் வரை தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது தேவையான அளவு கச்சா எண்ணெய் பயன்பாட்டில் உள்ளபோதிலும், டீசல், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு சந்தைகளில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்த பிரான்சிஸ்கோ பிளான்ச், எரிசக்தி சந்தையின் முடிவுப் பொருட்களில் (final products) தற்போது தீவிரமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/oil-prices-to-increase-amid-fuel-shortages-1786417090
