இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் நுண்கலை மற்றும் குறிப்பிட்ட சில சிறப்பு
பட்டப்படிப்பு அனுமதிக்குத் தேவையான பொது உளச்சார்பு மற்றும் செயன்முறைப்
பரீட்சைகளுக்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நாடளாவிய ரீதியில்
பொதுமைப்படுத்தப்பட்ட பரீட்சையை அறிமுகப்படுத்த உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலமும் அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் தனித்தனியாக மேற்கொண்டு வந்த
இந்தத் தெரிவுப் பரீட்சைகளை இனி பரீட்சைகள் திணைக்களம் நடத்தும் வாய்ப்பு
உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாற்றம் குறித்த முக்கியமான
கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியன்று நடைபெறவுள்ளது.
இதுவரை, நுண்கலை, மொழிபெயர்ப்பு கற்கைகள், விளையாட்டு விஞ்ஞானம், உடற்கல்வி
போன்ற பாடப் பிரிவுகளுக்காக ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனியாக பொது
உளச்சார்பு மற்றும் செயன்முறைப் பரீட்சைகளை நடாத்தி வந்தன.
பொது நிறுவனங்களுக்கான குழு
ஆனால்,
நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்களுக்கான குழுவின் (கோப்) பரிந்துரைகள் மற்றும்
முறைப்பாடுகளின் காரணமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பொது முறைமையைப்
பின்பற்றத் திட்டமிட்டுள்ளது.
இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம்
திகதியன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் உயர் மட்ட
கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பரீட்சைகள்
திணைக்கள ஆணையாளர் நாயகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள்,
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆகியோர் பங்கேற்று, பரீட்சைகள்
திணைக்களத்தின் கீழ் இந்தப் பரீட்சைகளை நடத்தும் வாய்ப்புகள் தொடர்பில்
ஆராயவுள்ளனர்.
இந்த மாற்றம், மாணவர் தெரிவில் வெளிப்படைத்தன்மை, ஒருமைப்படைவு மற்றும்
சமத்துவத்தை உறுதி செய்வதுடன், தற்போதைய முறையில் உள்ள குறைகளையும் சரி செய்ய
உதவும் என நம்பப்படுகிறது.
