லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானியின் பட்டச்சான்றிதழ் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரால் கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக, விமானியான விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டியவின் உடலுக்கு முதுகலைப்பட்டச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணத்துக்காக சென்றிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதில் விமானியாக இருந்த விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய உயிரிழந்தார்.
விமானப்படை மரியாதையுடன் இறுதி அஞ்சலி
சம்பவத்தில் உயிரிழந்த விமானி கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டத்தை வெற்றிகரமாக முடித்ததாகவும், நேற்று பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்த போதிலும், நாட்டின் சூழ்நிலை காரணமாக அதை நடத்த முடியவில்லை என்றும் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் இந்திக கருணாதிலக தெரிவித்தார்.
அவருடைய உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (03.12.2025) அவருடைய பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் நாளைய தினம் (04.12.2025)முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெற்றவுள்ளன.
மேலும், அவரது சேவைகளைப் பாராட்டும் வகையில், நவம்பர் 30 ஆம் திகதி முதல் விங் கமாண்டர் பதவியில் இருந்து குரூப் கேப்டன் பதவிக்கு அவர் பதவி உயர்வு பெற்றார்.
