நாட்டுக்காக தான் விளையாட வேண்டும் என்பதுடன் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ வேண்டும் என்பதே தனது தந்தையின் ஒரே ஆசை என இலங்கை அணியின் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தந்தையின் பிரிவு தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துனித் வெல்லாலகே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆதரவுக்கு நன்றி
மேலும் கருத்து தெரிவித்த அவர், நான் எனது தந்தையை இறுதியாக பார்த்து விட்டு எனது அணியுடன் மீண்டும் இணையவுள்ளேன்.
அணிக்காக எனது நூறு வீதத்தையும் வழங்குவேன். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அணியின் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய, அணித் தலைவர், சக போட்டியாளர்கள், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் நாட்டு மக்கள் அனைவராலும் சிறந்த ஆதரவு கிடைத்தது.
அது எனக்கு ஒரு துணையாக இருந்தது. அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன்
எனது தந்தையிடமிருந்து சிறு வயதிலிருந்தே என்னுடைய கிரிக்கெட் ஆசைக்கு ஆதரவு கிடைத்தது.
நாள் முழுவதும் கூட அவர் என்னுடன் கூடவே இருந்தார்.
அவருடைய அந்த ஆதரவு காரணமாகவே நான் இன்று நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி அணிக்காக விளையாடி வருகிறேன்.
அவருடைய அனைத்து ஆசைகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவேன்” என தெரிவித்தார்.
குவியும் வாழ்த்துக்கள்
துனித் வெல்லாலகே 22 வயதிலேயே உலகையே திரும்பி பார்க்க வைத்த சிறந்த ஒரு வீரர்.
அண்மையில் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்காக பங்கேற்றிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டி நிறைவடைந்தவுடன் அவரது தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த செய்தியை அறிகிறார்.
தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக உடனடியாக நாடு திரும்பிய துனித், மீண்டும் விளையாடுவதற்காக நேற்றிரவு புறப்பட்டார்.
இவருடைய இந்த துயரமான சந்தர்ப்பத்திலும் கூட நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தை பாராட்டியும், கிண்ணத்தை கைப்பற்ற வாழ்த்து தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/play-for-his-country-dhunith-wellalage-1758356933
