Home இலங்கை சமூகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதே நத்தாரின் நோக்கம்: அநுரவின் விசேட அறிவிப்பு

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதே நத்தாரின் நோக்கம்: அநுரவின் விசேட அறிவிப்பு

0

  நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் இது குறித்து அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில் “இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

அர்ப்பணிப்பு 

அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும்.

கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனையான இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும் அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

பெத்லகேமில் ஒரு ஏழை தொழுவத்தில் பிறந்து கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தை பாவத்திலிருந்து மீட்க சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு, மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் மற்றும் ஞானத்துடனும் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவம் கூறுகின்றது.

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக அமைய வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version