Home முக்கியச் செய்திகள் சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் நுழைந்த விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் நுழைந்த விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவை (M. Thambirasa) செப்டம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் விடுதிக்குள்
நுழைந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டதுடன் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பி தவறாக வழிநடத்தினார் என்ற
குற்றச்சாட்டில் கைதான மு.தம்பிராசாவை செப்டம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைத்தியசாலை விடுதி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் ராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து
உயிரிழந்துள்ளார் என தெரிவித்து காவல்துறையினருக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி காவல்துறையினர் வைத்தியசாலை விடுதி அறைக்கு
வெளியே வைத்தியரை அழைத்த போதும், வைத்தியர் வெளியே வராததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் விடுதி அறையை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

இந்தநிலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அங்கு சென்ற காவல்துறையினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

அடக்குமுறை

இதனையடுத்து சம்பவ இடத்தில் நின்ற மு.தம்பிராசாவையும் காணொளியை எடுக்க முயன்ற
இருவரையும் என மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் மூவரையும் சாவகச்சேரி நீதிவான்
நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.

விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர்
மு.தம்பிராசாவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் ஏனைய இருவரையும்
பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version