டித்வா சூறாவளியால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் தரவுகளையும் சேகரிக்க தேசிய திட்டமிடல் திணைக்களம் திட்டமொன்றைத் ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் அந்தத் தரவுகளையும் தகவல்களையும் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Microsoft நிறுவனம் ஆதரவு
அந்தத் தரவுகளையும் தகவல்களையும் தொடர்புள்ள இடங்களுக்குச் சென்று மிகவும் துல்லியமாகப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதை துரிதப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அறிக்கையிட உத்தேசித்துள்ளதாகவும், அதற்கான தகவல் கட்டமைப்பை MillenniumIT ESP நிறுவனம் இலவசமாகத் தயாரித்துள்ளதோடு Microsoft நிறுவனம் அதற்குத் தேவையான ஆதரவை வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Rebuilding Sri Lanka திட்டத்திற்காக பல நாடுகள் பெருமளவான நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கியுள்ளன என்றும், மேலும் உதவிகள் கிடைத்து வருவதாகவும் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் வழங்கிய தகவல்களின்படி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மாலைதீவு, அமெரிக்கா, நேபாளம், சுவிட்சர்லாந்து, கனடா, அயர்லாந்து, கொரியா போன்ற நாடுகளும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய நிறுவனங்களும் அத்தகைய நிதி உதவிகளை வழங்க உடன்பட்டுள்ளதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பேரழிவு நடைபெற்ற உடன் துரிதமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் பொருள் உதவிகளை வழங்கியதோடு மாலைதீவு, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் கட்டார் போன்ற பல நாடுகளும் பொருள் உதவிகளை வழங்கியதாக நிதி அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
