தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பிள்ளைகளை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான சட்ட நடவடிக்கை
பரீட்சைப் பெறுபேறுகளைக் காரணம் காட்டி பிள்ளைகளைத் தண்டிப்பதையோ அல்லது அவர்களை உளரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவதையோ தவிர்க்குமாறு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பிள்ளைகளுக்குத் அசௌகரியம், மன உளைச்சல் அல்லது அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான செய்திகள் மற்றும் பதிவுகளை வெளியிடுவதையோ அல்லது பரிமாறுவதையோ தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்கள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களாகக் கருதப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சு, இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சாத்தியமான அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
Source: https://tamilwin.com/article/scholarship-results-dont-punish-ministry-warns-1788354460
