பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய அரசாங்கத்துக்கு எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ் விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றாவிட்டால் டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் எனவும் குறித்த கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாடசாலை நேரத்தை நீடிக்கும் அரசு
பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் தீர்மானத்தை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
மாற்றங்களைச் செய்யும் போது வெவ்வேறு கருத்துகள் வெளிப்படுவது சாதாரணமானது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் எந்தவொரு ஆய்வையும் நடத்தாமல் பாடசாலை நேரத்தை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
