நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.
இதனடிப்படையில், இன்று (16) அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
இருப்பினும் இடர்களால் பாரியளவில் சேதமடைந்துள்ள ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 147 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள்
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்றைய தினத்தில் ஆரம்பமாகவுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தூய்மைப்படுத்தல் செயற்பாடுகள் நேற்று திங்கட்கிழமை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஏனைய தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில், இன்று ஆரம்பமாகவுள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இடம்பெறும்.
அத்தோடு, 23 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.
மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறும்.
தவணை பரீட்சைகள்
முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் 2026 ஜனவரி இரண்டாம் திகதி வரை இடம்பெறும் அத்தோடு டிசம்பர் 27 சனிக்கிழமையும் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இம்முறை தவணை பரீட்சைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தரம் 11 மாணவர்களுக்கு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கான பயிற்சியாக அமைவதால் அந்த மாணவர்களுக்குப் பொருத்தமானவாறு 2026 ஜனவரி மாதத்தில் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் ஜனவரி ஐந்து முதல் ஒன்பதாம் திகதி வரை இடம்பெறும்.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையை முன்னிட்டு ஜனவரி பத்தாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.
இரண்டாம் கட்டமானது ஜனவரி 21 முதல் பெப்ரவரி 13 வரை இடம்பெறும்.
இவ்வாண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்காக பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் இரண்டாம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.
மூன்றாம் கட்டம் மார்ச் மூன்றாம் திகதி முதல் ஏப்ரல் பத்தாம் திகதி வரை இடம்பெறும் அத்தோடு ஏப்ரல் 11ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.
முதலாம் கட்டம்
முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை இடம்பெறும்.
உயர்தர பரீட்சைகளை முன்னிட்டு ஜனவரி பத்தாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.
இரண்டாம் கட்டம் ஜனவரி 21 முதல் பெப்ரவரி 13 வெள்ளி வரை இடம்பெறும்.
சாதாரண தர பரீட்சை மற்றும் ரமழான் நோன்பினை முன்னிட்டு பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 22ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.
மூன்றாம் கட்டம் மார்ச் 23 முதல் ஏப்ரல் பத்தாம் திகதி வரை இடம்பெறும் அத்தோடு ஏப்ரல் 11ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.
நான்காம் கட்டம் ஏப்ரல் 20 முதல் 30 வரை இடம்பெறும் அத்தோடு மே முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி திகதி வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
