மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின்
பொதுக் கூட்டத்தில் ஒரே கட்சிக்காரர்களுக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கூட்டமானது நேற்று (9) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள
கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் மேகசுந்தரம் வினோராஜ்
தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தினால்
குருக்கள்மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை திறந்து மக்கள்
பாவனைக்கு விடுதல், கோட்டைக்கல்லாறு கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் கலாசார
மண்டபத்தின் வேலைகளைப் பூர்த்தி செய்தல், இப்பிரதேச எல்லைக்குட்பட்ட பாடசாலை
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவுதல், போன்ற பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குழப்பநிலை
இந்தநிலையில், தனது பதவிக்காலத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், நாடாளுமன்ற
உறுப்பினர் இரா.சாணக்கியன் தமது கூட்டுறவுச் சங்கத்திற்கு ஒதுக்கீடு
செய்திருந்த நிதி தொடர்பிலும் தலைவர் ஒளித்திரை மூலம்
காட்சிப்படுத்தினார்.
இதனையடுத்து, பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்
நடாத்தப்படவில்லை.கூட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நடாத்துமாறு சபை
உறுப்பினர் ப.குணசேகரம் உரத்த குரலில் தெரிவித்ததையடுத்து
குழப்பநிலை ஏற்பட்டது.
இது எனது தலைமையுரைக்கான நேரம் விரும்பினால் இருக்கலாம்
முடியாதவர்கள் போகலாம் என தலைவர் இதன்போது தெரிவித்தார்.
பின்னர் தலைவரின்
கூற்றை மீளப்பெறவேண்டும் என குணசேகரம் கேட்டுக் கொண்டதன் பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.