கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்)
கீழ் பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்ய குற்றப் புலனாய்வுத்
திணைக்களம் (CID) விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இவர்கள் மீது கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு
சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன.
பிள்ளையான், இனியபாரதியிடம் நடத்தப்பட்ட விசாரணை
பிள்ளையான் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.
புஷ்பகுமார் (இனியபாரதி) ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது
இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்ததாக அரச ஊடகமொன்று
செய்தி வெளியிட்டுள்ளது

இரண்டு சந்தேக நபர்கள் கடந்த வாரம் கைது
இந்த வெளிப்படுத்தல்களின் அடிப்படையில், கொழும்பு- வாழைத் தோட்டம் மற்றும்
மட்டக்களப்பில் அண்மையில், துப்பாக்கிச் சூடுகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக
நபர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

2007-2008 காலகட்டத்தில் பிள்ளையானால் இயக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழு, கிழக்கு
மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீதான தொடர்
படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் கட்டாய காணாமல் போதல்களுடன் தொடர்புடையவர்கள்
என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

