எண்ணெய் கொள்முதல் செய்யும் போது விலைமனு கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச் சேர்ப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை, இலங்கை (Sri Lanka) பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் இறக்குமதி
அமெரிக்காவுடனான (United States) வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், வளைகுடா பிராந்தியத்திலிருந்து இலங்கைக்கு எண்ணெய் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறிய அவர், கூடுதலாக, அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட கச்சா எண்ணெயை விலைமனு கோரல் செயல்பாட்டில் சேர்ப்பது குறித்து தற்போது விவாதங்கள் நடந்து வருவதாகவும்,
விலைகளின் அடிப்படையில் இரண்டு வகைகளில் எந்த வகையை இலங்கைக்கு இறக்குமதி செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
