Home இலங்கை சமூகம் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

0

நாட்டில் கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு படிப்படியாகத் தீர்வு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

இதனால், மக்கள் கலவரமடையத் தேவையில்லை,  தற்போது கடவுச்சீட்டுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று (22) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு பிரச்சினை

அவர் மேலும் கூறியதாவது, கடவுச்சீட்டு பிரச்சினை கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த அரசாங்கத்தால் விலைமனு வழங்கப்பட்ட நிறுவனம் உரிய நேரத்தில் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கவில்லை.

எவ்வாறிருப்பினும், நாம் அந்தப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறை சரி செய்வதற்காக நாம் தற்போது பாடுபட்டு வருகின்றோம்.

கடந்த சனிக்கிழமை 7,500 கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெற்றன. புதன்கிழமை 42,000 கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெறவுள்ளன.

மீண்டும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு

எனவே மக்கள் கலவரமடையத் தேவையில்லை. தற்போது கடவுச்சீட்டுக்கு தட்டுப்பாடு இல்லை.

இவ்வாரத்துக்குள் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெறும். நவம்பரில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுகள் கொண்டு வரப்படவுள்ளன.

எனவே மக்கள் அவசரப்பட்டு கொழும்புக்கு வர வேண்டிய தேவை இல்லை. மீண்டும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூர் கோவில்

இதேவேளை, கடந்த (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை (passport) வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்பட்டு நீல நிறத்தில் உள்ளது. முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்த நிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தலதா மாளிகை, யாழ்ப்பாணம் நல்லூர் கோவில், கொழும்பு தாமரை கோபுரம், வரலாற்று சிறப்புமிக்க காலி டச்சு கோட்டை சுவர், பொலன்னறுவை வரலாற்று இடங்கள், ரிட்டிபன்ன மீன்பிடி தொழில் அரக்கு நைனிவியா பாலம், சீகிரியா, தேயிலை தோட்டம், இறப்பர் வெட்டு மற்றும் இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பாரம்பரிய தொழில்கள் ஆகியவை புதிய கடவுச்சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version