இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உட்பட நான்கு நபர்கள் மீது இங்கிலாந்து அரசு சமீபத்தில் விதித்த தடைகளை இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) வரவேற்றுள்ளார்.
அது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் வெளியிட்ட பதிவில் அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் எக்ஸ் பதிவு
அதில், “ஐக்கிய இராச்சியம் இன்றைக்கு நான்கு இராணுவத் தளபதிகளுக்கு எதிராக பயணத்தடை உட்பட பல தடைகளை விதித்ததை நாம் வரவேற்கிறோம், நன்றி சொல்கிறோம். ” என சுமந்திரன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியம் இன்றைக்கு நான்கு இராணுவத் தளபதிகளுக்கு எதிராக பயணத்தடை உட்பட பல தடைகளை விதித்ததை நாம் வரவேற்கிறோம், நன்றி சொல்கிறோம். இவர்களின் பெயர்கள்:
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத் ஜயசூரிய மற்றும் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன்.
— M A Sumanthiran (@MASumanthiran) March 24, 2025
இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளதாக பிரித்தானிய அரசு மார்ச் 24 அன்று அறிவித்தது.
தடை விதிக்கப்பட்ட நபர்கள்
அதன்போது, இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தலைவர் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணகோடா, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் ஆகியோர் பிரித்தானியாவினால் தடை செய்யப்பட்ட நபர்கள் ஆவர்.
அத்தோடு, இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும்/அல்லது பாலியல் வன்முறை போன்ற பல்வேறு மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நபர்களை இலக்காகக் கொண்டு, பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.