இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் (Ukraine) பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேபர்கள் இருவரும் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்து இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விளம்பரத்தைப் பார்த்து இணைப்பை உள்ளிடுபவர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் சேர்க்கப்பட வேண்டும்.
கைது நடவடிக்கை
இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் மோசடி செய்து செல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் உனவடுன பிரதேசத்தில் இருந்து இது தொடர்பான மோசடி இடம்பெறுவதை கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
நீதிமன்ற உத்தரவு
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இந்த நாட்டுக்கு வந்துள்ள இவர்கள், டெலிகிராம் குழு ஒன்றின் ஊடாக இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Source: https://ibctamil.com/article/ukrainians-arrested-for-money-laundering-gifts-1727533926
