இலங்கையில் முறையான அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருவதுடன், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்காக மேற்கொள்ளப்படும் மேலதிக கல்வியை பயன்படுத்தி அவர்களிடம் பணம் அறவிடும் நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசிரியர்களுக்கு தகுதியானதும் முறையான அங்கீகாரம் பெற்றதுமான கல்வி வாய்ப்புகள் அரசாங்கத்தினால் போதுமான அளவில் வழங்கப்படாத காரணத்தினால், பலர் இவ்வாறான நிறுவனங்களை நம்பி ஏமாறுவதாகக் குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள் தங்களது பதவி உயர்வுகளுக்காக கல்வி டிப்ளோமா உள்ளிட்ட மேலதிக கற்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், முறையான அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் பயின்று பெறப்படும் சான்றிதழ்களை கல்வி அமைச்சு ஏற்க மறுப்பதால், ஆசிரியர்களின் பணமும் உழைப்பும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, ஆசிரியர்களை ஏமாற்றி பணம் அறவிடும் அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் 50 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட சுமார் 157 சிறிய பாடசாலைகளை மூடுவது தொடர்பாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சிறிய பாடசாலைகளை பராமரிப்பதும் அவற்றுக்கு ஆசிரியர்களை நியமிப்பதும் வீண் வேலை என அரசாங்க தரப்பில் கருதப்படுவதாகவும், அவற்றை மூடி மாணவர்களை பெரிய பாடசாலைகளுக்கு மாற்றுவதன் மூலம் தேவையான வசதிகளை வழங்க முடியும் என முன்வைக்கப்படும் வாதம் முற்றிலும் தவறானது என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இத்தகைய நடவடிக்கை கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற நிலைப்பாட்டை உருவாக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
